Friday 23 June 2017

செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந்த
தமிழ்நிலத்தில்

ஊரின் தொண்டைகுழிக்குள்
நரகலாய் குமட்டும்
சேரிக்காதல்...

சினைமுட்டைகளில் சேகரிக்கும்
சாதிப் பெருமிதத்தை
கருப்பை அறுத்தெறிந்து
அல்லது
சேரியின் கருசுமந்து
ஊர்த்தெருவின் பெண்களே
பிணந்திண்ணிகளின்
 பெரும்போரை முடித்து வைப்பார்கள்....

கடத்திக் கொண்டு போய்
கழுத்தறுத்துப் போட்டாலும்
தலைநறுக்கி
தண்டவாளத்தில் வீசியெறிந்தாலும்
கோகுல்ராஜ்
மட்டும்தான் மாவீரன்....

காதல்தான்
கதறவைக்கும் என்றால்
கணக்கை நேர்செய்ய
ஆயுளுக்கும்
காதல் செய்வோம்...

லெனின்.

Thursday 19 June 2014

நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள்?

May 24, 2014 at 3:24pm
வீதியில்
வெள்ளை வானத்தில்
விரிந்து பறக்கிறது
அந்த
கறுப்புக்கொடி...

வெப்பம் தகிக்கும்
நெருப்பு குரல்கள் 
உரக்கக் கேட்கின்றன....

மோடி ஒழிக ....
ராஜபக்ஷே ஒழிக ....

கொலைகாரனே
திரும்பிப்  போ.....போ ....

கூச்சலில் மறையும்
சாதித்திமிர்....

முடக்கத்தான் பாண்டி
செல்லஞ்சேரி சிவகாமி
சென்னகரம்பட்டி அம்மாசி,வேலு
மேலவளவு முருகேசன் .....
புதுக்கூரைப்பேட்டை   கண்ணகி முருகேசன்
நாயக்கன்கொட்டாய்  மங்கம்மா
தருமபுரி இளவரசன் .....

முயாமல் தொடரும்
தலித் படுகொலைகள்.....

யாரை நாடு கடத்தலாம்? 

மோடி ஒழிக ....
ராஜபக்ஷே ஒழிக ....

அதுசரி...

நீங்கள்
யாரை நேசிக்கிறீர்கள்?

....லெனின்


Thursday 5 December 2013

இனி அடிக்கு அடி அறிவியல் விதிப்படி...

December 5, 2013 at 5:27pm




தலைநிமிர்வே
தகர்க்க முடியாத தத்துவமே
எங்கள்வீரவணக்கம்....


கால்பதிக்கமுடியாத
ஊர்தெருக்களை
தீட்டுப்படுத்தாமல்
ஓய்வில்லை....


எச்சில் உலராத
செரட்டைகள் தொங்கும்
தேநீர் கடைகள்
தேசிய அவமானம்....


வீசும் காற்றைத்தவிர
வெளிகளெங்கும்
வேர்பிடித்துக் கிடக்கிறது
சாதி தீண்டாமை....


எரியும் குடிசையில்
நெருப்பின் பிடியள்ளி
வைத்திருக்கிறோம்...


இனி
அடிக்கு அடி
அறிவியல் விதிப்படி...


அண்ணலே உன் வழியில்.....


ஜெய்பீம்.....


 ..லெனின் 06-12-2013


Tuesday 22 October 2013

உரத்தக் குரல்களும் ஊடக பாவும் உண்மைகளும்

உரத்தக் குரல்களும் ஊடக பாவும் உண்மைகளும்

October 20, 2013 at 7:21pm
இப்போது தமிழகத்தில்  தமிழ், தமிழர் அடையாளங்கள், தமிழர்களின் தன்னாட்சி தன்னுரிமை கோரிக்கைகள் "பொங்கி பிரவாகித்து" பெருக்கெடுத்து ஓடுகின்றன. குறிப்பாக "ஈழம்" ஈரம் காய்ந்துவிடாத பரபரப்பூட்டும் செய்தியாக இருந்து வருகிறது. உணர்ச்சிப்பெருக்கோடு தன்னிலை மறந்து  தலித்துகளும்  முன்னின்று ஈழத்திற்காகப் போராடும் இத்தருணத்தில்   சாதி இந்துக்களுடனான விவாதம் எழும்போது  "சிங்கள பவுத்தம்" என்னும் சொல்லாடல் அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. அரசியல் முக்கியத்துவம் பெறும்  அச்சொல்லாடலின்மீது கடுமையான விவாதங்கள் அல்லது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்குள்ள சாதி இந்துக்கள்  பவுத்தத்தை ஏற்காவிட்டாலும் பவுத்தம் குறித்தத்  தத்துவப் பார்வை இல்லாமல் "ராஜபக்சே" என்னும் ஒற்றை மனிதனை முன்னிறுத்தி  மட்டும் பவுத்த கருத்தியலின்மீது வலிந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மனிதஉரிமை குறித்த அக்கறையுள்ளவர்களுக்கு  ராஜபக்சேவின்மீது கடும் விமர்சனங்கள் இருக்கிறது. இருப்பினும் குற்றம் சுமத்தும் சாதி இந்துக்கள்  பவுத்தம் குறித்துக் கேள்வி எழுப்பும் அளவிற்கு அப்பழுக்கற்றவர்களா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்து சனாதன அமைப்பை உடைக்கவும் சாதி அமைப்பைத் தகர்க்கவும் புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திக்காட்டிய பவுத்த மதமாற்றத்தை சாதி இந்து  "முற்போக்குவாதிகள்" இதுவரை ஏற்கவில்லை.

                                       

சொந்த தமிழ் நிலத்தில் பூர்வபவுத்தர்களான தலித்துகளை  தீண்டத்தகாதவர்கள்  என்று ஒதுக்குகின்றனர். "பூர்வபவுத்தர்களை" ஊர்தெருவுக்குள் நுழையவிதுவதில்லை.சமூகப் புழக்கத்திற்கு அனுமதிப்பதில்லை. "ஊர் -சேரி" என்னும் சமூகக் கட்டமைப்பில் தலித்துகளை சேரியில் மட்டுமே வாழும் சமூக நிர்பந்தத்தை ஆதிக்க சாதியினர் உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால் இதே "போலித்தமிழர்கள்"  ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்கு  "நீலிக் கண்ணீர்" வடிப்பது சிரிப்பை வரவழைக்கிறது. தலித்துகளை தமிழர்களாகக் கருதுவதில்லை.ஆனால் முற்போக்குமுகம் இருந்தாலும் "சாதிஇந்துக்களாக" அணிதிரள்கிறவர்கள் தமிழர் அடையாளம் குறித்துப் பேசும்  தார்மீகத்தகுதி எதுவோ?

வன்முறை அரசியலின் அடையாள சின்னமான  ராமதாசும் அவரின் சிஷ்யகோடி  வேல்முருகனும் தமிழர் அடையாளம் குறித்து நீட்டி முழக்கிப்  பேசிவருகிறார்கள். பச்சை வன்னிய சாதி வெறியர்களான இருவரும் தங்கள் சாதிவெறியை மூடி மறைக்க பயன்படுத்தும் பதுங்குகுழியாக  "தமிழர்கள்" என்ற அடையாளத்தைப் பயன்படுத்திகொள்கிறார்கள். இந்த பேராபத்தை ஆதிக்க சாதி இந்துக்களால் தடுக்க முடியவில்லை என்பது "மொழிதேசிய" அரசியலின் பலகீனத்தைக் காட்டுகிறது. இதை உணராத சூத்திர  ஈழ ஆதரவாளர்கள்  "தமிழர்கள்" என்ற சொல்லாடலில் மயங்கி  தங்களையும் மறந்து சாதிவெறியர்கள் அழைத்தவுடன்  கொடி தோரணங்களுடன் அணிதிரள்கின்றனர். இந்த அணிவகுப்பு  உள்ளுக்குள் புரையோடியிருக்கும் "சூத்திரபாசத்தைக் மட்டுமே காட்டுகிறது. இரத்தக்கறைபடிந்ததும் மரண ஓலங்கள் நிரம்பியதுமான தமிழர் வரலாற்றை சூத்திரர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். அதே வரலாற்றின் போக்கில் சாதி இந்துக்கள் எனப்படும் சூத்திரர்கள்  பவுத்த வழியை துறந்து தன்னல நோக்கத்துடன் வர்ணாசிரம சாதிக்கட்டமைப்பை ஏற்றவர்கள் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. மேலும் அவர்கள் பார்ப்பனீயத்தை ஏற்று பவுத்தத்தை மறுத்து "உயர்சாதி" அந்தஸ்து பெற்றதை இன்றுவரை பெருமிதமாகவே  கருதுகிறார்கள். இவர்கள் தங்களின்  உயர்சாதி பெருமையை  நிலைக்க வைக்க கடந்த காலத்தில் நிகழ்த்திய படுகொலைகள் காலத்தால் மறக்க முடியாத வன்மத்தின் பதிவுகள். இன்றுவரை அதற்காக சாதி இந்துக்கள் பகிரங்க மன்னிப்புக் கோரியதில்லை.

                                                  

பார்ப்பனர்கள்+ சாதிஇந்துக்கள் கூட்டணி  "அன்பை மட்டுமே போதித்த" அப்பாவி பவுத்தர்கள் மற்றும் சமணர்களை கழுவிலேற்றி கொலைசெய்தது. வருணபாச படுகொலைகளுக்கு   "முன்னாள் முள்ளிவாய்க்கால்" என்றுதானே பெயர்சூட்ட முடியும். ஒடுக்குமுறை அரசியலில் படுகொலை களங்களின் பெயர்கள் மட்டுமே மாறுகின்றன. முன்னாள் கொலைகாரர்கள் இப்போது ஒரு நபரை குற்ற உணர்வின்றி எதிர்ப்பது மட்டுமே நகை முரண் . தங்களின் பார்ப்பன விசுவாசத்தை வெளிப்படுத்த சூத்திர இராஜாக்கள் பார்ப்பனர்களின் துணையுடன் செய்து முடித்த படுகொலைகள் ராஜபக்சேவின் கொடுமைகளை மிஞ்சும். ஆனால் ஈழ ஆதரவு அன்பர்கள் அதுபற்றி எப்போதுமே வாய்திறப்பதில்லை. எனினும் அனல் பறக்க  "சிங்கள பவுத்தம்" என்று கடுமையான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

புத்தரின் அறக்கருத்துகளை முன்வைத்து ஆயுதம் ஏந்த மறுத்து எதிரி (பார்ப்பனர் +சூத்திரர்)கள் கொலைசெய்திட  துணிந்தபோதும் மவுனப்புன்னகையுடன் மரித்த  பவுத்தத்துறவிகள் மற்றும் சமணமுனிவர்களைப்போல் இப்போதும் பவுத்தர்கள் ஆயுதமற்று அடிபணிந்து இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் போலும். கசப்பான இழப்புகள் மட்டுமே எஞ்சும் பழைய  வரலாற்றில் இருந்து  புதிய பாடங்களை பவுத்தர்கள் உணர்ந்துள்ளதை மறுதலிக்க முடியாது. பவுத்தம் அன்பை போதிக்கிறது ஆனால் ஆதிக்கத்தையும்  அடக்குமுறையையும்  அடிமையாவதையும்  எதிர்க்கிறது. ஆயுதம் தாங்கும் விருப்பமில்லாமல் இருப்பதால்தான் தருமபுரி,மரக்காணம் என்று ஆதிக்கசாதி இந்துக்கள் வெறியாட்டம் போடுகின்றனர்.

இலங்கையில் சிங்களவர் மற்றும் சாதி இந்துக்களுக்கிடையே  நடப்பது வெறும் அரசியல் அதிகாரத்திற்கான சண்டைதான். ஆனால் ஈழத்திலும் ஈழ ஆதரவுக்குரல் ஒலிக்கும் இந்தியாவிலும் தலித்துகளோ சமூக உரிமை மட்டுமே கோருகிறார்கள். ஆளும் அதிகாரம் கேட்டு எழும் குரலும் அடிப்படை மனித உரிமைக்காக எழும் குரல்களும் ஒன்றல்ல. இரண்டு குரல்களின் நியாங்களும் வெவ்வேறானவை. தலித்துகள் உரிமை கேட்டால் பதிலுக்கு சாதி இந்துக்கள் அவர்களை கொலைசெய்கிறார்கள்.மேலும் அவர்களின் வீடுகளுக்கு தீவைப்பது, உடைமைகளை கொள்ளையடிப்பது என்பது  சாதி இந்துக்களின் மாறாத பொதுஇயல்பாக இருந்து வருகிறது. ஆனால் இதே சாதிஇந்துக்கள் ஈழத்தில் இந்து தேசியம் அமைக்க விரும்பியவர்களின் அரசியல் உரிமைக் கனவை நனவாக்க தொடர்ந்து குரல் எழுப்புவது சாதி இந்துக்களின் அதிகார எல்லை  நீட்சிக்கான விருப்பத்தின் வெளிப்பாடாகும். ஆதிக்கக் கனவில் அதிகாரம் கோரிய ஈழத்து சாதிஇந்துக்களின் அரசியல் உரிமை போராட்டத்தை சிங்கள பவுத்தம் ஏற்கவில்லை. எனினும் சிங்களர்களின் போர்முறைகளின்மீது எழும் விமர்சனங்களில் உள்ள நியாயங்களை தள்ளிவிட முடியாது.

பவுத்தத்தின் மீதான பகை முரணில் இங்குள்ள ஆதிக்க சாதி இந்துக்கள் பதைபதைக்கிறார்கள் அல்லது அவர்களின் ஈழ ஆதரவு குரலில் அப்பகைமுரண்  மறைபொருளாக இருக்கிறது.. ஆயுதம் ஏந்தியேனும் அமைக்க விரும்பிய "ஈழ (இந்து)தமிழ் தேசிய" ப்போர் படுதோல்வியில் முடிந்து விட்டது. சீமான் மராட்டியத்தில் சிவசேனை மற்றும் பா.ஜ.க.கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் . வைகோ இந்துத்துவ சக்திகளுடன் அரசியல் உறவு கொள்கிறார். இந்துத்துவ சனாதனப்  பார்வையுடன் சிவசேனை மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் ஈழஆதரவு  நிலைப்பாடு அமைகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த உறவுகளின் பிணைப்பை கவனத்தில் கொண்டால்  ஈழப்போரின் உள்ளடக்கமாக இந்து தேசியம் அமைந்திருப்பது புலனாகிறது. சிவசேனை மற்றும் பா.ஜ.க.ஆகிய கட்சிகள் சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்ப்பதற்கும் , ஈழத்தை ஆதரிப்பதற்கும் "இந்துத்துவா"  அல்லது  இந்து தேசியம் என்ற ஒற்றை பார்வை மட்டும்தான் காரணம்.

ராஜபக்சே தற்சமயம் புதிதாக தமிழர் பகுதியில் கட்டிய  பவுத்த விகார் குறித்துக்  கேள்வி எழுப்பும் சாதி இந்துக்கள்  பூர்வ பவுத்தர்களின் வழிபாட்டு தலங்களான பவுத்தவிகார்களை இன்றுவரை தமிழகத்தில் தங்கள் வசம் இந்துகோவில்களாகவே வைத்திருகிறார்கள்.

மயிலை கபாலீஸ்வரர் கோவில் , காஞ்சி காமாட்சி கோவில் , தில்லை சிதம்பரம் நடராசர் கோவில்,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இன்னபிற கோயில்கள் முதலானவற்றை பார்ப்பனர்களும் சாதி இந்துக்களும் எப்போது தலித்துகளிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்? பழைய பவுத்த விகார்களான இந்த கோவில்களை ஒப்படைக்கும் கோரிக்கைகள் தலித் அமைப்புகளிடமிருந்து மட்டுமே வருகின்றன. சாதி இந்துக்களின் அமைப்புகளோ அல்லது கட்சிகளோ கூட இந்த கோரிக்கைகளை எழுப்புவதில்லை. மாறாக சூத்திர திராவிட இயக்க அரசுகள் தலித்துகளுக்கு சொந்தமான அந்த கோவில்களை சுண்ணாம்பு பூசி பழுது பார்த்து கும்பாபிசேகம் நடத்தி பார்ப்பன ஆதிக்கம் மேம்படவே வழிவகை செய்கிறார்கள்.சாதி இந்துக்கள் கோவில்மீதான தங்கள் ஆதிக்க பங்காக அறங்காவலர் பதவியை பெற்றுகொள்கின்றனர். இது பார்ப்பனர் + ஆதிக்கசாதிஇந்து கூட்டணி தர்மம் போலும் .கோவில் பார்ப்பனர் மற்றும் சூத்திரர்களின் கூட்டுக்கொள்ளை நடக்கும் இடமாகிவிட்டது. இவர்களின் பிடியில் சிக்கித்திணரும் கோவில்களில் தலித்துகளுக்கு அனுமதி மறுப்பது அவர்களின் சாதி ஆதிக்கத்தை பறைசாற்றும் வெட்கக்கேடான செயலின் வெளிப்பாடாகும். சூத்திர அரசுகளின் சாதனை என பெருமைபேசும் இந்து அறநிலையத்துறை பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் சூத்திரர்களின் பங்கை கோரி பெற்றுக் கொண்டது. சொற்ப அளவுகூட தலித்துகளுக்கு கோவில் நிலங்களில் பங்கு தரப்படவில்லை. குறைந்தபட்சம் வழிபாட்டு உரிமைகூட வழங்கவில்லை. அறநிலையத்துறைக்  கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் சூத்திர சாதி இந்துக்களின் அடாவடித்தனங்கள் அரங்கேறி வருவது யாவரும் அறிந்ததே. பவுத்தத்திற்கு எதிரான சூத்திர திரட்சியில் தலித்துகளின் மீதான தீண்டாமை இறுக்கமடைந்துதிருக்கிறது. பார்ப்பனர்களின் வசம் இருந்த அரசு மற்றும் கோவில்,  சூத்திரர் வசமுள்ள அரசு மற்றும் கோவில் ஒப்பீட்டளவில் ஒரே தன்மையுடன் இயங்கும், தலித்துகளை ஒடுக்கும் சாதி ஆதிக்க குறியீடுகள்தான்.
                                                            
பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து தலித்துகளின் நிலம் மற்றும் வழிபாட்டிடங்களைப் பறித்தவர்கள்  இன்னமும் பூர்வபவுத்தர்களை "நிராயுதபாணிகளாக " வைத்திருக்கவே விரும்புகிறார்கள். பூர்வபவுத்தர்களுக்கு எதிராக  சாதி இந்துக்கள்  கக்கிவரும் தொடர் வன்மத்தின் வெளிப்பாடே தருமபுரி தாக்குதல் சம்பவம். அதனை வன்னியர்களின் சாதிவெறியாக குறுக்கிப் பார்க்க முடியாது. சமூகதளத்தில் சாதி இந்துக்களே தலித்துகளுக்கு நேரெதிராக முரண்பட்டு அவர்களின்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த வன்முறை எண்ணத்தின் உள்ளடக்கம் பார்ப்பனீயசேவை உணர்வுதான். அடிமைத்தனத்தை வலியுறுத்தும் வருணாசிரம கட்டமைப்பை ஏற்று கொண்ட சூத்திரர்கள் வெற்று "விடுதலை முழக்கம்" எழுப்புவது வரலாற்று முரண். தருமபுரி தாக்குதலுக்குப்பின்   தமிழ்தேசியவாதிகள், பெரியார் இயக்கவாதிகள் காத்து வரும் மவுனம் வரலாற்றுத் துரோகம்.

முள்ளிவாய்க்கால் கொடுமைக்கு முக்கி முக்கி அழுகிறவர்கள் "சேரி என்னும் திறந்தவெளி சிறைக்கூடக் கொடுமைக்கு" எதிராக எதையும் சாதிக்கவில்லை. ஊர்-சேரி அமைப்பிற்கு எதிராக அவர்கள் காத்துவரும் "கள்ள மவுனம்" சாதி இந்துக்களின்  இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைக்காக பேசுகிற முற்போக்காளர்கள் கூட "சேரியில் வதைபடும்"தலித்துகள் இதே சாதி இந்துக்களால் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு மல ஜல உபாதைகளுக்குக் கூட ஒதுங்கவும் பிணத்தை எரிக்கவும் இடமின்றி தவிப்பதுபற்றி தொடர்ந்து பேசமறுக்கிறார்கள். மேலும் செயற்பாட்டுத் தளத்திலும் தொடர்ந்து இயங்குவதில்லை என்பதுடன் அதனை தலித் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் வேலை என்றும்  கருதுகின்றனர். தலித்துகளை தரிசு நிலங்களில் அல்லது புறம்போக்கு நிலங்களில் வாழ நிர்பந்தித்துவரும் சாதிஇந்துக்கள் ஈழத்தமிழர்களின் நிலஉரிமைப் பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது.வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் தலித்துகளின் வாழ்நிலையை மாற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த " நவீன காலத்தின் போராளிகள் " குரல் எழுப்புவதில்லை.சாதி இந்துக்கள் மோசடியாக அபகரித்து வைத்திருக்கும் தலித்துகளின் பஞ்சமி நிலங்களை மீண்டும் தலித்துகளிடம் சாதி இந்துக்கள் திருப்பித்தர வலியுறுத்தாமலும் பஞ்சமி நிலஉரிமைப்பற்றி பேசாமலும் ஈழத்தமிழர் நிலவுரிமைப் பற்றி மட்டுமே பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை.சொந்த நாட்டில் சாதிவெறியுடன் அலையும் ஆதிக்க சாதி இந்துக்கள் அடுத்தவர்களின் நியாங்களை நீட்டி முழக்குவதை முந்தையகால மேடை நாடகங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

வன்முறையால் வஞ்சகத்தால் சொந்தநாட்டில் தலித்  மக்களை அடிமைகளாய் வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் குற்றங்களை கேள்விகேட்கும் தார்மீக உரிமை உடையவர்களா என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

Wednesday 25 September 2013

காத்திருந்து கக்கிய விஷம்.....

September 20, 2013 at 6:58pm
சிவகாமி ....எல்லோர்க்கும் அறிமுகமான ஒரு போராளியின் பெயர்.

பத்தாம் பசலித்தனமான அறிவிலிகளின் கூறியதைப் போல் அவருக்கு விளம்பர வெளிச்சம் தேவையில்லை ......

 சிவகாமி அம்மையாரின் உள்நோக்கமற்ற பொதுவாழ்வின் தூய்மை மக்களுக்கு அவரை சரியாய் அறிமுகப்படுத்தி இருக்கிறது.....

அவர் சமரசமற்ற பொதுவாழ்வின் சரியான அடையாளம்.  யாருக்கும் பயப்படாமல் மாற்றுக் கருத்தையும் துணிச்சலுடன் முன்வைக்கும் அவரின் வீரத்தை பாராட்ட மனமில்லாதவர்கள் சாதிவெறியர்களாகவே  இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம் ....

'சமூக நீதி' என்று முழங்கி கொண்டே தலித்துகளை ஒடுக்கும் சூத்திர சாதியினரின் " தலித் " விரோத போக்கை தோலுரித்துக் காட்டியவர்மீது சூத்திரர்கள் கக்கியது கோபம் அல்ல...கொடும் விஷம்......அளவிட்டு சொல்ல முடியாத வன்மம்....

                                                           

சிவகாமி அம்மையார் சொன்ன "தகவல்" வெறும் கருத்துப்  பகிர்வு மட்டுமே.. ..அவரிடம் பகிரப்பட்ட செய்தியை உள்நோக்கம் இன்றி புலிகளின் மீது தனிப்பட்ட வெறுப்புணர்வு இல்லாமல் அதனை பகிர்ந்துகொண்டார்......பெண்களின் மீதான ஒடுக்குமுறையின் வடிவங்களை விவரிக்கும்போது பெரிதும் மதிக்கப்படும் ஈழப்போராளிகள் மத்தியிலும் இருப்பதாக கேள்விப்பட்ட ஒடுக்குமுறையை  கேள்விப்பட்ட தகவலாக  மட்டுமே பகிர்ந்து கொண்டார் ....அவ்வளவே ....

ராஜ்பஷே சொல்லாத தகவலை சொன்னதாக எம்பி குதிப்பவர்கள் "புலிகளை புனிதர்களாக்குவது" ஏன்?

புலிகள் சாதியை கடைபிடிப்பதில்லை என்று முழங்குவோர் ஏன் "புலிகளின் சாதிஒழிப்பை" கடைபிடிப்பதில்லை...என்பது வேறு விஷயம் ....

புலிகளிடம் இருந்து "கருணா" பிரிந்த ரகசியம் என்ன? அவர்மீது பாலியல் குற்றச்சாட்டும் இருந்தது என்பதை மறைக்க முடியுமா?

விமர்சன வெளிச்சத்திற்கு அப்பால் புலிகளை நிறுத்துவோரின் ரகசிய திட்டம்  என்னவோ?

முகநூலில் எழுதுவோர் மெத்தப்படித்தவர்கள் ....உலகமறிந்தவர்கள் ...பெரியாரியம்...மார்க்ஸியம் ..தலித்தியம் பயின்ற  கருத்தியாலாளர்கள் அல்லது பொது தளத்தில் இயங்கும் படித்தவர்கள்.

ஆனால் அவர்களின் எழுத்துக்கள் அவர்கள் கற்று கொண்டதான அரசியல் அடையாளத்தை சிதைத்து விட்டது.... கருத்தை கருத்தால் மறுத்திருக்கலாம் ....

கருத்தை கருத்தால் சந்திக்க வலுவற்று 'நாரச நடையில்" எழுதி தாங்கள் வெறும் புலிகளின் பக்தகோடிகள் மட்டுமே என்று நிரூபித்துள்ளனர்.

"பிரபாகரன் சர்வதேச பறையன்" என்ற சு. சாமியிடம் சூத்திர சாதியினர் எந்த மன்னிப்புப் பத்திரத்தையும் எழுதி வாங்காததன் மர்மம் என்னவோ?

இனப்படுகொலைக்குக் காரணமானர் என்று மூச்சுக்கு மூச்சு முழங்கி திட்டித்தீர்க்கும் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட நெஞ்சில் தைரியம் இல்லமால் போய்விட்டது....ஒருவேளை சூத்திர சாதி தருமம் தடுக்கிறது போலும் ...

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று வாக்குப் பொறுக்கிய, போயஸ் கார்டனின் காவலர்களை சூத்திரர்களே உங்கள் கோபம் என்ன செய்தது?

இலை மலர்ந்தது ....ஈழம் எங்கே?

வெற்று  முழக்கமான "சாதியற்ற தமிழ் தேசியத்தை"  "தேவர் திருமகனின்" கல்லறையில் அடமானம் வைத்த சூத்திரசாதி தலைவர்களை உங்கள் கோபம் பொசுக்காமல் போனது ஏன் ?

உங்கள் "தமிழ் தேசிய அங்கமான தருமபுரியில்" "தீவைத்து, கொள்ளையடித்த " ராமதாஸ் கும்பலின்  சாதிவெறிக்கு எதிராக உங்களால் தைலாபுரம் நோக்கி படையெடுக்க முடியவில்லையே ஏன் ?

                                                                

உங்கள் சூத்திர சாதிவெறி ....பொங்கி வழிந்தோடும் தமிழ் தேசியத்தில் சாதி கோலோச்சும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை ....

சாதி மறைக்க முடியாத தொன்மப் படிமமாய் உங்களின் நெஞ்சில் உறைந்து கிடக்கிறது .....

கருத்து சுதந்திரம் பேசிய 'பெரியார்'  உங்களிடம் தோற்றுப்  போனார் ....

சூத்திர சுயமரியாதை சுடரொளிகளே சாதிவன்மம் வழியும் உங்களின் "ஒருமை + ஆபாச" பேச்சுகளுக்காக மானமிருந்தால் நீங்கள் வெட்கப்படுங்கள் ....

"காத்திருந்து நீங்கள் கக்கிய விஷத்தின்" ஈரம் காய்வதற்குள் அம்மையார் சிவகாமியைப்போல் அறிவு நாணயத்துடன் மன்னிப்புக் கோருங்கள் .....

ஆத்திரம் , அடக்க முடியாத கோபம் , அருவெறுப்பு , ஆபாசம் நிரம்பிய உங்களின் வார்த்தைகளில் நிதானம் இருந்தால்

விவாதிக்கலாம் நிறைய ....நீங்கள் ஆத்திரப்படாமல் இருக்கும் வரை ....

 இலட்சியத்தின் ”பிறழ்வுபுள்ளிகள்”



சமூகப்பிரச்சனைகள் மற்றும்  அதன் அரசியல் பின்புலங்களின்மீது எழும் விமர்சனங்கள் இயல்பானது. சமூக அரசியல் வேலைத்திட்டங்களின்மீதும் அதன் கருத்தியல்களின்மீதும் விவாதங்கள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் செய்வதும் அரசியல் உணர்வை செழுமைப்படுத்த  உதவும். இந்த புரிதலற்ற சச்சரவுகள் சகோதர யுத்தத்திற்கே இட்டு செல்லும் என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகள் சான்றாகும். பெண்களின் மீதான வன்முறை, பாலியல் சுரண்டல் மற்றும் படுகொலை முதலான வன்கொடுமைகளை விவரித்த புதிய தலைமுறை  நிகழ்ச்சியில்   "புலி" பற்றிய கருத்துமட்டும் "பற்றி எரியும்" பரபரப்பூட்டப்பட்டது. 

தலித் அரசியல் , தலித் நிலஉரிமை, திருநங்கையர்களின் சமூக விடுதலை , யாராலும் கவனிக்கப்படாத பழங்குடியினருக்கு அரசியல் உணர்வூட்டி அவர்களை அரசியல் அல்லது சமூக இயக்கங்களாக்கியது, தலித் இலக்கியம் , தலித் பெண்ணுரிமை, தலித் படைப்பாளர் மற்றும் எழுத்தாளர்களை அரசியல் பயிற்சியுடன் உருவாக்கும் உன்னத முயற்சி என்று அம்மையார் சிவகாமி அய்.எ.எஸ் அவர்களின் களமும் தளமும் விரிந்து பரந்து கிடக்கிறது.  அவர்களின் தீவிர அர்ப்பணிப்பு நிறைந்த கடந்தகால களப்பணிகளின்போது அவரின்மீது குவியாத  "சாதி இந்துக்களின்" பார்வை, வெறும் ”கருத்துப்பகிர்விற்காக” அவர் கடும் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேர்ந்தமை இயல்பாக நடந்ததல்ல . அதிகம் படித்தவர்கள் , அரசியல் நுண்ணுணர்வு உள்ளவர்கள் சமூக அறங்களுக்கு முரணான நடையில், தொனியில் மனித மாண்புகளுக்கு எதிரான பாணியில் வார்த்தைகளை வன்மத்துடன் அள்ளிவீசினார்கள்.

                                                                   


ஆத்திரம் கொப்பளிக்க அவர்கள் அள்ளிக் கொட்டிய “கழிவுகள்” அவர்கள் ஆற்றிவரும் சமூகப் பாத்திரங்களின்மீது வலுவான சந்தேகங்களை கிளப்புகின்றன . உறைபனியில் உறைந்துகிடக்கும் “உயிர் படிமக்கூறு”போல் முற்போக்கு முலாம் பூசப்பட்ட அவர்களின் ஆழ்மனதில் புதையுண்டிருந்த “சாதிப்படிமங்கள்” கீழது மேலாய் புரண்டுவருகிறது. கொதித்து மேல்வரும் கோப உணர்ச்சியில் வெடித்துக்கிளம்பும் சொற்களில் அவர்கள் கடந்த காலங்களில் படித்தறிந்த பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை முதலான இத்தியாதி  இத்தியாதி விஷங்கள் அவர்களுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அவர்கள் நீட்டி முழக்கும்  முற்போக்குக் கருத்தியல்கள் அல்லது கொள்கைக் கோட்பாடுகள் அவரவர்களின் சாதிஉணர்வின்மீது பூசப்பட்ட பூச்சுதான் என்பது அவர்களின் 'மெய்'  மறந்த மொழிகளில் பளிச்சிடுகின்றன.

இதுவரை விமர்சன வெளிச்சத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்ட புலிகளின்மீது விமர்சனம் என்றவுடன் ஏழுமலைதாண்டி , ஏழு கடல் தாண்டி வைக்கப்பட்ட முனிவரின் உயிரைத் தீண்டும் ”திகில் நிறைந்த புராணக்கதை”யொத்து  கத்திக்கதறி கூச்சலிடுகிறார்கள். புலிகளின் சாகசப்போரில் அங்கு நிலவும் "தீண்டாமை" கொடுமைகள் எதுவும் இன்னமும் மறைந்து விடவில்லை என்பதற்கு ஈழத்துத் தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களே இறவா வரம்பெற்ற  சாட்சிகளாகத் திகழ்கின்றன.

தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய அரசியலில் ”கரையேறும்” கடைசி துடுப்பு "புலிகள்" என்ற ஆசைக்கனவில் மிதந்தவர்கள் "புலிகளின்" வீழ்ச்சிக்குப்பின் விம்மி, பொருமி வெறுங்கை பிசைந்து நிற்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசர் முன்வைத்த சாதியொழிப்பு அரசியல் கருத்தியலின் வளர்ச்சியாக தமிழ்த்தேசியக் கருத்தியல் நீட்சி பெறாமல் , சனாதன ’சாதிச்சார்புடையதாக’ சாதிஇந்துக்கள் பேசும் தமிழ்த்தேசியம் எல்லை குறுகி விட்டது. தலித்துகளின் மீதான வன்முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் இன்றைய சூழலில் சாதிஇந்துக்கள் மட்டுமே காரணம் என்னும் சூழலில்  தமிழ்த்தேசியவாதிகள் கனத்த மவுனம்காத்து வேடிக்கைப் பார்ப்பதன் மறைபொருள் ”ஆதிக்க சாதி உணர்வே” ஆகும். 


                                                               

"சமூக பிரஞை"யற்ற மக்களின்முன் சாகச சர்க்கஸ் வித்தையில் மயங்கும் குழந்தைகளைப்போல்   புகழ்மொழிகளின் வெளிச்சத்தில் "புலிகளின் வீரதீரங்கள்" கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. புல்லரிக்கும் அந்த புகழ் மொழிகளைக் கேட்டு சிலாகித்து மகிழ்வதைத் தவிர எத்தகைய சமூகக்கருத்தியல் வளர்ச்சிக்கும் "புலி ஆதரவு அரசியல் " இட்டுச் செல்லவில்லை. புலிகளை ஆதரிக்கும் சாதிஇந்துக்கள் மற்றும் சூத்திர கட்சிகள் அரசியல் ”அதிகாரப்பகிர்வுகளின்”போது தலித்துகளை சேர்த்துகொள்ளாமல் வஞ்சிக்கும் சூழ்ச்சிக்கு தலித் கட்சிகள்  பலியானது தலித் அரசியலில் ஒப்புகொள்ளவேண்டிய பின்னடைவுதான்.

கடந்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்த "மாற்று அணி" அரசியல் தமிழ்த்தேசிய மையப்புள்ளியிலிருந்து வரையப்பட்ட  முழுவட்டம்தான். சூத்திர கட்சிகள் வழக்கம்போல் வாக்குப்பொறுக்கவும், தங்களின்  வாழ்க்கையைப் பரிமளிக்க வைக்கும் அதிகார வேட்டைக்கும் தயாரனார்களேயன்றி ”தலித்தலைமை”யின் அறைகூவலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அந்த குரல் பாலைவனக்குரலாக தனித்து ஒலித்து அடங்கிய துயரம், நெருஞ்சிமுள் நிறைந்த பாதையைக் கடந்த அரசியல் அனுபவத்தை சிறுத்தைகளுக்குத் தந்திருக்க வேண்டும். சூத்திர சாதிக்கட்சிகளின் "இனநலம் அல்லது இனவிடுதலை " என்பதன் பொருள் சூட்சமமும் உள்நோக்கமும் நிறைந்தது என்பதையும் தலித்துகள் நீங்கலானது என்பதையும் மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பின் தோல்வி உணர்த்துகிறது.

எப்போதும் "புலிகளின் பக்கத்திலேயே நிற்கும் சிறுத்தைகள்" அரசியல் களத்தில் நிராயுதபாணியாய் நின்றதற்கும், நிற்பதற்கும் ”ஆதிக்க சாதி உணர்வும்” சாதி இந்து மனோபாவ சூழ்ச்சியும்தான் காரணம். சூத்திரர்களின் ”கூட்டாஞ்சோறு”  கொள்கையில் ”சேரிக்குப் பங்கு செரட்டையில்தான்” என்ற தீண்டாமைப்போக்கு தேர்தல் பங்கீடுகளின்போது நடப்பது கசப்பான நிதர்சனம். புலி ஆதரவு, புகழ்மணக்கும் ”தமிழ்த்தேசிய பெருமிதம்” கானல் நீர் அல்லது மாயமான் வேட்டை என்பதை தலித்கட்சிகளை சூத்திர கட்சிகளின் தொடர் புறக்கணிப்புகள் உறுதிசெய்கின்றன.

உள்ளீடற்ற அன்புடன்(?)  "கீழறுப்பு"  வேலை செய்வது சூத்திர திராவிட கட்சிகளுக்கும் ”முற்ப்போக்கு சூத்திரர்கள்” நிரம்பிவழியும் ”முற்போக்குமுகாம்”களுக்கும் கைவந்த கலை. இந்த சூட்சமம் குறித்தப் புரிதலின்றி ஈழக்கனவில், சாதியொழிந்த தமிழ்த்தேசியக் கனவில் உலவும் தலித் கட்சிகள் சரியான முந்தைய தங்களின் நேர்கோட்டு பயணத்திலிருந்து விலகி திசைமாறியதற்கு அல்லது திசை மாற்றப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

சாதி இந்துக்களுக்கு எதிராக அம்பேத்கரின் கொள்கைகளுடன் உக்கிரமடைந்த தலித் அரசியலில் முன்வைக்கப்பட்ட "அரசியல் உரிமை , பொருளாதார உரிமை , எல்லோர்க்கும் நிகரான சமூக சமஉரிமை, (சாதி இந்துக்களின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிரான) தலித் பெண்ணுரிமை என்பன போன்ற கோரிக்கைகள் மற்றும் தலித்துகளின் தொடர்போராட்டங்கள் ஈழத்திசையில் ”மடைமாற்றப்பட்டு” விட்டது. திசைமாறிய தலித் அரசியல் பயணத்தின் முழக்கமான ”ஈழவிடுதலை” கோரிக்கை சாதிஇந்துக்களிடமிருந்தும் வருணசமூக அமைப்பிலிருந்தும் சேரிக்கு எந்த வகையில் விடுதலைப் பெற்றுத்தரும் என்பது ”மில்லியன் டாலர் கேள்வி”களாகும். நாள்தோறும் சாதி இந்துக்களால் ”கொலை, கொள்ளை, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, வாழ்விடங்கள் எரிப்பு, பொருளாதார இழப்பு” என சமூகபயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித்துகளால் மற்றப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவின்றி வேறு வகையிலான ஆதரவை அளிக்க முடியாது என்பது பெருகிவரும் தீண்டாமை வன்கொடுமைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடங்கள்.

அவர்களின் திட்டப்படி ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்மைய இலக்கிலிருந்து மெல்ல விலக்கப்பட்ட தலித்துகளின் இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகள் இப்போது பேசுவாரின்றி அரசியல் "அநாதை"யாக்கப்பட்டுவிட்டன. தமிழ்தான் பேசும்மொழி என்றாலும் , தமிழ் நிலம் தான் வாழ்நிலம் என்றாலும் சொந்த மண்ணில் தமிழ்பேசும் தலித்துகளின்மீது "தீண்டாமையை" ஏவும் சூத்திரர்களுடன் அமைத்துக் கொள்ளும் கூட்டணியை கொள்கைக் கூட்டணியாக வரையறுக்க முடியாது. தமிழ்த்தேசியக் கருத்தியல்  குறைந்தபட்சம்   "சூத்திரர்+தலித் " அரசியல் மற்றும் சமூகக்கூட்டுறவாக மலராதபோது "தமிழ்த்தேசிய" சாத்தியப்பாடுகள்  குறித்த மீளாய்வு அவசியமாகிறது. "சூத்திரர்+தலித் " கூட்டுறவு சாத்தியமில்லையெனில் ”சாதியொழிந்ததமிழ்தேசியம்” வெறும் கற்பனைச் சொல்லாடல் அல்லது  தெரிந்தே சொல்லும் பச்சைப்பொய்.

”பொதுச்சொத்துகளில் சமஉரிமை” கேட்கும் தலித்துகளின் கோரிக்கைகளுக்கு சாதிஇந்துக்களின் அல்லது சூத்திரர்களின் ’மறுமொழி’ வன்முறையும் படுகொலையும்தான். ”முடக்கத்தான் பாண்டி”யின் அல்லது சென்னகரம்பட்டி அம்மாசி,வேலு ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னும் ”பொதுச்சொத்துகளில் சமஉரிமை” என்னும் கோரிக்கையை சாதி இந்துக்களிடமிருந்து தலித் இயக்கங்கள் வென்றெடுத்து விடவில்லை. அத்தகைய உரிமைகளை தந்துவிடும் அளவிற்கு தற்போது ”ஊட்டப்பெறும்” தமிழ்த்தேசிய உணர்வு சாதிஇந்துக்களின் மனதை மாற்றிவிடவில்லை.

பொதுத்தொகுதியில் தலித்துகளை வேட்பாளர்களாக நிறுத்தும் சுமூகச்சூழல் எழாத ஜனநாயக அவலத்தை சூத்திரகட்சிகள் கைவிடுகிறதா? காப்பாற்றுகிறா? தலித்துகளை தங்களின் வேட்பாளர்களாக நிறுத்தும் இயல்பான மனநிலைக்கு அந்த கட்சிகள் வரமுடியாததற்கு யார் பொறுப்புதாரிகள்? சூத்திர கட்சிகள் தங்கள் ’கட்சியதிகார’ அமைப்புகளில் ’கட்சியின்’ அதிகாரத்தை தலித்துகளுடன் பகிர்ந்து கொண்டு தங்கள் கட்சியை எல்லோருக்குமான தமிழர்கட்சிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டனவா? இல்லையெனில் ஏனைய சூத்திரர்கள்தான் தங்களின் பிரதிநிதியாக தலித்துகளை சாதிபார்க்காது  தேர்ந்தெடுக்கும் சமநிலைக் கருத்தியல்களை ஏற்று கொண்டுவிட்டனரா? சூத்திரர்-தலித் பேத உணர்வுகள் மங்கி ”சமரசம் உலவும் பூமி”யாக தமிழ்த்தேசியக்கருத்தியலால் அல்லது திராவிடக் கட்சிகளின் கொள்கைகளால் தமிழகம் பக்குவப்படுத்தப்பட்டுவிட்டதா? சாதியமைப்பின்  அடிப்படை எதுவும் மாறவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்ற மறுக்க முடியாத யதார்த்தார்த்தை மீறி பிரபலப்படுத்தப்படும் தமிழ்த்தேசியக்கருத்தியல் வெறும் மேடை  அலங்காரம்தானே?

செட்டித்தெருவில் ரெட்டிகள் குடியேறும் வாய்ப்புப் பெற்ற இந்துத்துவச் சூழலில் ”ஊர்-சேரி” எல்லைகளைக் கூட வறட்டுத்தனமான மொழித்தேசிய அரசியல் மாற்றியமைக்கவில்லை. உண்மையில் பார்ப்பனர்களைப்போல் சூத்திரர்களும் "Veg.only" போர்டுகள் தொங்க  விட்டு தலித்துகளுக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் செல்லுபடித்தன்மை அவ்வளவே!

சூத்திரர்களின் முதலீட்டில் வெளிவரும் பளபளக்கும் பத்திரிகைகளில், தலித்துகளின் வீட்டிற்குள் வந்து அலறும் அவர்களின் தொலைக்காட்சிகளில் "SC / ST நீங்கலாக" மணமகன், மணமகள் தேடுவதை தமிழ்த்தேசிய கருத்தியல் பிரச்சாரம் தடுக்கவில்லை. வெட்கமற்று  தொலைக்காட்சிகளில் அத்தகைய நிகழ்ச்சியை ஒலி,ஒளிபரப்பும் சூத்திர முதலாளிய நிறுவனங்களை எதிர்க்கிற ”அரசியல் உள்ளீடு”  தமிழ்தேசியக் கருத்தியலில்  இல்லை.

"Veg.only" போர்டுகள்  தொங்கும்வரை,  "SC / ST நீங்கலாக"  விளம்பரங்கள் வெளியாகும் நிலைமை முடியும்வரை சாதியொழிப்பு பயணத்தின் திசைவழி மாறாதிருக்க வேண்டும் என்பதே சரியான அரசியல் மற்றும் சமூக இயங்கியலாகும். சூத்திரர் உள்ளடக்கிய ஒடுக்கப்படுவோருக்கான சரியானபாதை மற்றும்  சமஉரிமை, சமத்துவம் , ஜனநாயகம், சமூக நீதி என்னும் இலக்கை எட்டும் தத்துவம் அம்பேத்கரியம் என்னும் புரிந்துணர்வுடன் தலித்தலைமைகள் பணியாற்ற வேண்டும் என்ற தலித்துகளின் எதிர்பார்ப்பில் தவறில்லை.

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தலித்அரசியல் சமூக விடுதலைப்பணிகள் மறுபடியும் சரியான திசைவழியில் பயணித்தால் மட்டுமே இந்துத்துவ அரசியல் சக்திகள் மற்றும் பா.ம.க போன்ற சாதிபயங்கரவாத  சக்திகளின் எழுச்சியைத் தடுக்க முடியும். தருமபுரி தாக்குதல் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இளவரசன் படுகொலை அம்பேத்கரிய சாதியொழிப்புக் கருத்தியலை முன்னெடுக்க வேண்டிய அவசரத்தேவையை தலித் தலைவர்களுக்கு உணர்த்துகின்றன. கருத்தை மயக்கும் வசீகர விளம்பர வெளிச்சத்தில் ஜொலிக்கும் ”புலி அரசியல்” அல்லது அதைப்போன்றதான வேறு ”திசைமாற்றிகளையும்”  ‘பகுத்தறிந்து’ இனம் காண வேண்டும்.

ஒடுக்குமுறைக்கு எதிரான சமத்துவப் போராட்டம் என்னும் அரசியல் நுண்ணுர்வில் தலித்துகள்  ஈழ ஆதரவு மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் தலித்துகளின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளில் ஈர்ப்போ, பிடிப்புணர்வோ  கொண்டு  தலித்துகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நின்று சூத்திரர்கள் இரட்டை வாக்குரிமை கோராமல் இருப்பது சூத்திரர்களுடனான ” அரசியல் அதிகாரப் பகிர்வை” அவர்கள் விரும்பவில்லை என்பதுடன்  சூத்திரர்களின் சாதிஆதிக்க இந்துத்துவ மனநிலையை காட்டுகிறது. தலித்துகளின் விடுதலை உணர்வுக்கு எதிரான  சூத்திரர்களுடன்  சேர்ந்து "இன்னொருவரின்" விடுதலைக்கு கரம் கோர்ப்பது இயல்பாகவே ”கூடா நட்பு” நெருடல் உணர்வை ஏற்படுத்துகிறது.

தலித் இயக்கப்  பதாகைகளில் ஒளிரும் ”பிரபாகரன்” உள்ளிட்ட  படங்களைப்போல் சாதி இந்துக்களின்  பதாகைகளில் மட்டுமின்றி தலித் இயக்கப்பதாகைகளில் கூட "பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, அன்னை மீனாம்பாள் , தந்தை சிவராஜ், ஜான் ரெத்தினம் , இம்மானுவேல் சேகரன் படங்கள் காணமுடிவதில்லை. தலைவர்களின் படங்கள் வரலாற்றின் பாடங்கள் என்ற புரிதலில் பார்த்தால் இருட்டடிக்கப்பட்ட அவர்களின் போராட்ட வாழ்வை சேரிகள் தெரிந்துகொள்ள முடியாமல் அத்தகையோரின் படங்கள் மறைக்கப்படும் காரணம் புரியும்.

பண்டிதர் அயோத்திதாசர் , ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் பணிகளை இன்னும் சேரி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்காததற்கு அம்பேத்கரை ”எதிர் அரசியல் குறியீடாகக் ”கருதும் சாதி இந்துக்களை தலித் இயக்கங்கள் பொறுப்புதாரிகளாக்க முடியாது.

தங்களுக்கான "வகுப்புவாரி உரிமை” கோரும் சூத்திரர்கள்  கூட்டணி உறவு கொள்ளும் தலித் கட்சிகளுக்கு  தேர்தல் இடப்பகிர்வில் சேரி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிப்பது அவர்கள் முன்வைக்கும் "வகுப்புவாரி உரிமை” கொள்கைக்கே எதிரானது. 46 ஆண்டுகள் தமிழகத்தில் அரசு அதிகாரத்தில் ஊறித்திளைத்துவரும் சாதி இந்துக்களின் பேராதரவுப் பெற்ற திராவிட கட்சிகள் ஒருமுறைகூட "தலித் முதலமைச்சர்" கோஷத்தை வைக்காதது ”அவாள்” முன் மண்டியிட்டு பணியும் அடிமத்தனம்தான்.  சூத்திரர்களின் "வகுப்புவாரி உரிமை”  அல்லது “சமூகநீதி” பார்ப்பனீயத்தால் மலடாக்கப்பட்ட நகைமுரணான “சமூகநீதி”.

சாதியின்முன் பணியும் சூத்திரர் அரசுகள் முழங்கும் சமூகநீதி நம்பகத்தன்மையற்றது. சட்ட மன்றத்தில் இது ”நாலாஞ்சாதிஅரசு” அல்லது “சூத்திரர்அரசு” என்று தம்பட்டம் அடிக்கும்  அவர்களின் அரசு சட்டப்படி நிரப்பியிருக்க வேண்டிய தலித்மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளை 100% நிரப்பாமல்  "Back Lack" காலியிடங்களாகவே "அடைகாப்பது" அவர்களின் ”சமூக நீதி- சூத்திரர் நீதி”தான் என்பதை அம்பலமாக்கி விட்டது.
இந்திய அரசியல் சட்டப்படியான தலித்மக்களுக்கான கல்வி வேலைவாய்ப்பினை 100% நிரப்பாமல் மத்திய அரசுப் பணியில் சூத்திரர்கள் பயன்பெறும் “மண்டல்கமிஷனை” 100% முழுமையாக நடைமுறைப்படுத்த போராடும் சூத்திரர்களின் "சமூகநீதியை" தலித்துகளைத் தவிர யார் கேள்வி கேட்கமுடியும்? கற்பனையானது என்றாலும் முரண்பட்ட நியாயங்களுடன் இரட்டைவேஷம் தரிக்கும் சூத்திரர்களின் "தமிழ்த்தேசிய" அரசில் தலித்துகளுக்கு என்ன பங்கைத் தந்துவிடுவார்கள்? வரலாற்றின் நெடுகிலும் "இரட்டை வேஷம்போடும்" வேடதாரிகளுடன் "தோழமை" கொள்ளுதல் ’பொய்த்துப்போகும் கனவு’ என்னும் ஆபத்து நிறைந்தது.

"தமிழ்த்தேசியம்" தழைத்து, செழித்து வளரும் இந்த சமகாலத்தில்தானே தர்மபுரி மற்றும் மரக்காணத்தில்  தலித்துகளின் குடிசைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பா.ம.க வின் சூத்திரசாதி வன்னியர்கள் வாழத்துடித்த இளவரசனை ”காவுவாங்கி” தங்களின் ”வருணக்கடன்” முடித்தபோது தமிழ்த்தேசிய ”முழங்கிகள்” ஈழப்படுகொலைக்கு நீதிகேட்டு  போர்பரணிக்கொட்டி இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டதுபோல் தைலாபுரத்தை முற்றுகையிடாது கடைபிடித்த மவுனத்தின் பொருளை எந்த அகராதியைப் புரட்டி புரிந்து கொள்ளாலாம் என்பதை ”தமிழ்த்தேசிய சாதி இந்துக்களிடமே” விட்டுவிடலாம்.  தலித்துகளின் குடிசை எரிக்காமல் சேரிகளில் கொலைகள் நடக்காமல் ”அகண்ட தமிழ்த்தேசியம்” அமைக்கும்   ’பொன்னுலகு’ முயற்சிக்கு முற்போக்குப் பேசும் சூத்திரர்கள் கைவசம் வைத்திருக்கும் வேலைத்திட்டம் என்னவோ?

                                                                   


சமூகநீதிபேசும் சூத்திரர்களின் அமைப்பிற்குள் அம்பேத்கர் மற்றும் பண்டிதரின் கருத்தியலை அவர்களின் கொள்கை வேலைத்திட்டங்களில் சேர்க்காமல், விவாதப் பொருளாக்காமல் ”தள்ளி” வைத்திருப்பதை  வருணாசிரம ’தீட்டு’க் கருத்தியலுடன் ஒப்பிட்டு அரசியல் தளத்தில்  நிலவும் ”கருத்தியல் தீட்டு” அல்லது ”கருத்தியல் தீண்டாமை” எனக் கருத இடமுண்டு.
அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமைகோரும் சூத்திரர்கள் தங்களின் ஆதிக்கம் நிலவும் கோவில்களில் தலித் மக்களுக்கான கோயில் நுழைவு உரிமை வழங்க மறுப்பது ”சூத்திரர்களே மேல்சாதி” என்னும் சாதி ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுதான் என்பது மறுப்பதற்கில்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஊரை வளைத்துப்போடும் சூத்திர சாதியினரிடமிருந்து "பஞ்சமி நிலங்களை" சூத்திர அரசுகள் மீட்டுத்தரவில்லை. "பஞ்சமி நிலங்களைப்" பற்றி தலித்துகளை தவிர வேறுயாரும் பேசாமல் மௌனித்து இருப்பதற்கு அவர்களின் வெளிப்படையான சூத்திரபாசம்தான் காரணம்.  இரட்டைக் குவளைகள் அல்லது  ”செரட்டைகள்” ஒழியாத தேசத்தில் இருந்து ஒலிக்கும் விடுதலை முழக்கத்தில் வன்மங்களின் ஓலம் அடக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. பார்ப்பனிய கருத்தியலில் ஊறித்திளைக்கும் சூத்திரர் அல்லது தமிழ்த்தேசியவாதிகள் நமது இலட்சியத்தின் ”பிறழ்வுபுள்ளிகள்” என்பது புரியுமானால் சிவகாமி உள்ளிட்ட போராளிகளின்மீது சாதிவெறி தூற்றல்கள் நிகழாது. அம்பேத்கரை முன்வைத்து தலித்துகளை அணிதிரட்டுதல், தலித் அமைப்புகளுக்கு வலிமையூட்டல் என்னும் அரசியல் பணிகள் மட்டுமே  தலித்துகளின் சமூகத் தற்காப்பு அரண். பிறழ்வற்ற  சாதிஒழிப்புப் பணிகளே நமது விடுதலைப் பயணத்தின் சரியான திசைவழி. 

...லெனின்
25-09-2013