இலட்சியத்தின் ”பிறழ்வுபுள்ளிகள்”
சமூகப்பிரச்சனைகள் மற்றும் அதன் அரசியல் பின்புலங்களின்மீது எழும் விமர்சனங்கள் இயல்பானது. சமூக அரசியல் வேலைத்திட்டங்களின்மீதும் அதன் கருத்தியல்களின்மீதும் விவாதங்கள் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் செய்வதும் அரசியல் உணர்வை செழுமைப்படுத்த உதவும். இந்த புரிதலற்ற சச்சரவுகள் சகோதர யுத்தத்திற்கே இட்டு செல்லும் என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகள் சான்றாகும். பெண்களின் மீதான வன்முறை, பாலியல் சுரண்டல் மற்றும் படுகொலை முதலான வன்கொடுமைகளை விவரித்த புதிய தலைமுறை நிகழ்ச்சியில் "புலி" பற்றிய கருத்துமட்டும் "பற்றி எரியும்" பரபரப்பூட்டப்பட்டது.
தலித் அரசியல் , தலித் நிலஉரிமை, திருநங்கையர்களின் சமூக விடுதலை , யாராலும் கவனிக்கப்படாத பழங்குடியினருக்கு அரசியல் உணர்வூட்டி அவர்களை அரசியல் அல்லது சமூக இயக்கங்களாக்கியது, தலித் இலக்கியம் , தலித் பெண்ணுரிமை, தலித் படைப்பாளர் மற்றும் எழுத்தாளர்களை அரசியல் பயிற்சியுடன் உருவாக்கும் உன்னத முயற்சி என்று அம்மையார் சிவகாமி அய்.எ.எஸ் அவர்களின் களமும் தளமும் விரிந்து பரந்து கிடக்கிறது. அவர்களின் தீவிர அர்ப்பணிப்பு நிறைந்த கடந்தகால களப்பணிகளின்போது அவரின்மீது குவியாத "சாதி இந்துக்களின்" பார்வை, வெறும் ”கருத்துப்பகிர்விற்காக” அவர் கடும் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேர்ந்தமை இயல்பாக நடந்ததல்ல . அதிகம் படித்தவர்கள் , அரசியல் நுண்ணுணர்வு உள்ளவர்கள் சமூக அறங்களுக்கு முரணான நடையில், தொனியில் மனித மாண்புகளுக்கு எதிரான பாணியில் வார்த்தைகளை வன்மத்துடன் அள்ளிவீசினார்கள்.
ஆத்திரம் கொப்பளிக்க அவர்கள் அள்ளிக் கொட்டிய “கழிவுகள்” அவர்கள் ஆற்றிவரும் சமூகப் பாத்திரங்களின்மீது வலுவான சந்தேகங்களை கிளப்புகின்றன . உறைபனியில் உறைந்துகிடக்கும் “உயிர் படிமக்கூறு”போல் முற்போக்கு முலாம் பூசப்பட்ட அவர்களின் ஆழ்மனதில் புதையுண்டிருந்த “சாதிப்படிமங்கள்” கீழது மேலாய் புரண்டுவருகிறது. கொதித்து மேல்வரும் கோப உணர்ச்சியில் வெடித்துக்கிளம்பும் சொற்களில் அவர்கள் கடந்த காலங்களில் படித்தறிந்த பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்விடுதலை முதலான இத்தியாதி இத்தியாதி விஷங்கள் அவர்களுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அவர்கள் நீட்டி முழக்கும் முற்போக்குக் கருத்தியல்கள் அல்லது கொள்கைக் கோட்பாடுகள் அவரவர்களின் சாதிஉணர்வின்மீது பூசப்பட்ட பூச்சுதான் என்பது அவர்களின் 'மெய்' மறந்த மொழிகளில் பளிச்சிடுகின்றன.
இதுவரை விமர்சன வெளிச்சத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்ட புலிகளின்மீது விமர்சனம் என்றவுடன் ஏழுமலைதாண்டி , ஏழு கடல் தாண்டி வைக்கப்பட்ட முனிவரின் உயிரைத் தீண்டும் ”திகில் நிறைந்த புராணக்கதை”யொத்து கத்திக்கதறி கூச்சலிடுகிறார்கள். புலிகளின் சாகசப்போரில் அங்கு நிலவும் "தீண்டாமை" கொடுமைகள் எதுவும் இன்னமும் மறைந்து விடவில்லை என்பதற்கு ஈழத்துத் தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களே இறவா வரம்பெற்ற சாட்சிகளாகத் திகழ்கின்றன.
தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய அரசியலில் ”கரையேறும்” கடைசி துடுப்பு "புலிகள்" என்ற ஆசைக்கனவில் மிதந்தவர்கள் "புலிகளின்" வீழ்ச்சிக்குப்பின் விம்மி, பொருமி வெறுங்கை பிசைந்து நிற்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசர் முன்வைத்த சாதியொழிப்பு அரசியல் கருத்தியலின் வளர்ச்சியாக தமிழ்த்தேசியக் கருத்தியல் நீட்சி பெறாமல் , சனாதன ’சாதிச்சார்புடையதாக’ சாதிஇந்துக்கள் பேசும் தமிழ்த்தேசியம் எல்லை குறுகி விட்டது. தலித்துகளின் மீதான வன்முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் இன்றைய சூழலில் சாதிஇந்துக்கள் மட்டுமே காரணம் என்னும் சூழலில் தமிழ்த்தேசியவாதிகள் கனத்த மவுனம்காத்து வேடிக்கைப் பார்ப்பதன் மறைபொருள் ”ஆதிக்க சாதி உணர்வே” ஆகும்.
"சமூக பிரஞை"யற்ற மக்களின்முன் சாகச சர்க்கஸ் வித்தையில் மயங்கும் குழந்தைகளைப்போல் புகழ்மொழிகளின் வெளிச்சத்தில் "புலிகளின் வீரதீரங்கள்" கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. புல்லரிக்கும் அந்த புகழ் மொழிகளைக் கேட்டு சிலாகித்து மகிழ்வதைத் தவிர எத்தகைய சமூகக்கருத்தியல் வளர்ச்சிக்கும் "புலி ஆதரவு அரசியல் " இட்டுச் செல்லவில்லை. புலிகளை ஆதரிக்கும் சாதிஇந்துக்கள் மற்றும் சூத்திர கட்சிகள் அரசியல் ”அதிகாரப்பகிர்வுகளின்”போது தலித்துகளை சேர்த்துகொள்ளாமல் வஞ்சிக்கும் சூழ்ச்சிக்கு தலித் கட்சிகள் பலியானது தலித் அரசியலில் ஒப்புகொள்ளவேண்டிய பின்னடைவுதான்.
கடந்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்த "மாற்று அணி" அரசியல் தமிழ்த்தேசிய மையப்புள்ளியிலிருந்து வரையப்பட்ட முழுவட்டம்தான். சூத்திர கட்சிகள் வழக்கம்போல் வாக்குப்பொறுக்கவும், தங்களின் வாழ்க்கையைப் பரிமளிக்க வைக்கும் அதிகார வேட்டைக்கும் தயாரனார்களேயன்றி ”தலித்தலைமை”யின் அறைகூவலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அந்த குரல் பாலைவனக்குரலாக தனித்து ஒலித்து அடங்கிய துயரம், நெருஞ்சிமுள் நிறைந்த பாதையைக் கடந்த அரசியல் அனுபவத்தை சிறுத்தைகளுக்குத் தந்திருக்க வேண்டும். சூத்திர சாதிக்கட்சிகளின் "இனநலம் அல்லது இனவிடுதலை " என்பதன் பொருள் சூட்சமமும் உள்நோக்கமும் நிறைந்தது என்பதையும் தலித்துகள் நீங்கலானது என்பதையும் மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பின் தோல்வி உணர்த்துகிறது.
எப்போதும் "புலிகளின் பக்கத்திலேயே நிற்கும் சிறுத்தைகள்" அரசியல் களத்தில் நிராயுதபாணியாய் நின்றதற்கும், நிற்பதற்கும் ”ஆதிக்க சாதி உணர்வும்” சாதி இந்து மனோபாவ சூழ்ச்சியும்தான் காரணம். சூத்திரர்களின் ”கூட்டாஞ்சோறு” கொள்கையில் ”சேரிக்குப் பங்கு செரட்டையில்தான்” என்ற தீண்டாமைப்போக்கு தேர்தல் பங்கீடுகளின்போது நடப்பது கசப்பான நிதர்சனம். புலி ஆதரவு, புகழ்மணக்கும் ”தமிழ்த்தேசிய பெருமிதம்” கானல் நீர் அல்லது மாயமான் வேட்டை என்பதை தலித்கட்சிகளை சூத்திர கட்சிகளின் தொடர் புறக்கணிப்புகள் உறுதிசெய்கின்றன.
உள்ளீடற்ற அன்புடன்(?) "கீழறுப்பு" வேலை செய்வது சூத்திர திராவிட கட்சிகளுக்கும் ”முற்ப்போக்கு சூத்திரர்கள்” நிரம்பிவழியும் ”முற்போக்குமுகாம்”களுக்கும் கைவந்த கலை. இந்த சூட்சமம் குறித்தப் புரிதலின்றி ஈழக்கனவில், சாதியொழிந்த தமிழ்த்தேசியக் கனவில் உலவும் தலித் கட்சிகள் சரியான முந்தைய தங்களின் நேர்கோட்டு பயணத்திலிருந்து விலகி திசைமாறியதற்கு அல்லது திசை மாற்றப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
சாதி இந்துக்களுக்கு எதிராக அம்பேத்கரின் கொள்கைகளுடன் உக்கிரமடைந்த தலித் அரசியலில் முன்வைக்கப்பட்ட "அரசியல் உரிமை , பொருளாதார உரிமை , எல்லோர்க்கும் நிகரான சமூக சமஉரிமை, (சாதி இந்துக்களின் பாலியல் வக்கிரங்களுக்கு எதிரான) தலித் பெண்ணுரிமை என்பன போன்ற கோரிக்கைகள் மற்றும் தலித்துகளின் தொடர்போராட்டங்கள் ஈழத்திசையில் ”மடைமாற்றப்பட்டு” விட்டது. திசைமாறிய தலித் அரசியல் பயணத்தின் முழக்கமான ”ஈழவிடுதலை” கோரிக்கை சாதிஇந்துக்களிடமிருந்தும் வருணசமூக அமைப்பிலிருந்தும் சேரிக்கு எந்த வகையில் விடுதலைப் பெற்றுத்தரும் என்பது ”மில்லியன் டாலர் கேள்வி”களாகும். நாள்தோறும் சாதி இந்துக்களால் ”கொலை, கொள்ளை, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, வாழ்விடங்கள் எரிப்பு, பொருளாதார இழப்பு” என சமூகபயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித்துகளால் மற்றப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவின்றி வேறு வகையிலான ஆதரவை அளிக்க முடியாது என்பது பெருகிவரும் தீண்டாமை வன்கொடுமைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடங்கள்.
அவர்களின் திட்டப்படி ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்மைய இலக்கிலிருந்து மெல்ல விலக்கப்பட்ட தலித்துகளின் இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகள் இப்போது பேசுவாரின்றி அரசியல் "அநாதை"யாக்கப்பட்டுவிட்டன. தமிழ்தான் பேசும்மொழி என்றாலும் , தமிழ் நிலம் தான் வாழ்நிலம் என்றாலும் சொந்த மண்ணில் தமிழ்பேசும் தலித்துகளின்மீது "தீண்டாமையை" ஏவும் சூத்திரர்களுடன் அமைத்துக் கொள்ளும் கூட்டணியை கொள்கைக் கூட்டணியாக வரையறுக்க முடியாது. தமிழ்த்தேசியக் கருத்தியல் குறைந்தபட்சம் "சூத்திரர்+தலித் " அரசியல் மற்றும் சமூகக்கூட்டுறவாக மலராதபோது "தமிழ்த்தேசிய" சாத்தியப்பாடுகள் குறித்த மீளாய்வு அவசியமாகிறது. "சூத்திரர்+தலித் " கூட்டுறவு சாத்தியமில்லையெனில் ”சாதியொழிந்ததமிழ்தேசியம்” வெறும் கற்பனைச் சொல்லாடல் அல்லது தெரிந்தே சொல்லும் பச்சைப்பொய்.
”பொதுச்சொத்துகளில் சமஉரிமை” கேட்கும் தலித்துகளின் கோரிக்கைகளுக்கு சாதிஇந்துக்களின் அல்லது சூத்திரர்களின் ’மறுமொழி’ வன்முறையும் படுகொலையும்தான். ”முடக்கத்தான் பாண்டி”யின் அல்லது சென்னகரம்பட்டி அம்மாசி,வேலு ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னும் ”பொதுச்சொத்துகளில் சமஉரிமை” என்னும் கோரிக்கையை சாதி இந்துக்களிடமிருந்து தலித் இயக்கங்கள் வென்றெடுத்து விடவில்லை. அத்தகைய உரிமைகளை தந்துவிடும் அளவிற்கு தற்போது ”ஊட்டப்பெறும்” தமிழ்த்தேசிய உணர்வு சாதிஇந்துக்களின் மனதை மாற்றிவிடவில்லை.
பொதுத்தொகுதியில் தலித்துகளை வேட்பாளர்களாக நிறுத்தும் சுமூகச்சூழல் எழாத ஜனநாயக அவலத்தை சூத்திரகட்சிகள் கைவிடுகிறதா? காப்பாற்றுகிறா? தலித்துகளை தங்களின் வேட்பாளர்களாக நிறுத்தும் இயல்பான மனநிலைக்கு அந்த கட்சிகள் வரமுடியாததற்கு யார் பொறுப்புதாரிகள்? சூத்திர கட்சிகள் தங்கள் ’கட்சியதிகார’ அமைப்புகளில் ’கட்சியின்’ அதிகாரத்தை தலித்துகளுடன் பகிர்ந்து கொண்டு தங்கள் கட்சியை எல்லோருக்குமான தமிழர்கட்சிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டனவா? இல்லையெனில் ஏனைய சூத்திரர்கள்தான் தங்களின் பிரதிநிதியாக தலித்துகளை சாதிபார்க்காது தேர்ந்தெடுக்கும் சமநிலைக் கருத்தியல்களை ஏற்று கொண்டுவிட்டனரா? சூத்திரர்-தலித் பேத உணர்வுகள் மங்கி ”சமரசம் உலவும் பூமி”யாக தமிழ்த்தேசியக்கருத்தியலால் அல்லது திராவிடக் கட்சிகளின் கொள்கைகளால் தமிழகம் பக்குவப்படுத்தப்பட்டுவிட்டதா? சாதியமைப்பின் அடிப்படை எதுவும் மாறவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்ற மறுக்க முடியாத யதார்த்தார்த்தை மீறி பிரபலப்படுத்தப்படும் தமிழ்த்தேசியக்கருத்தியல் வெறும் மேடை அலங்காரம்தானே?
செட்டித்தெருவில் ரெட்டிகள் குடியேறும் வாய்ப்புப் பெற்ற இந்துத்துவச் சூழலில் ”ஊர்-சேரி” எல்லைகளைக் கூட வறட்டுத்தனமான மொழித்தேசிய அரசியல் மாற்றியமைக்கவில்லை. உண்மையில் பார்ப்பனர்களைப்போல் சூத்திரர்களும் "Veg.only" போர்டுகள் தொங்க விட்டு தலித்துகளுக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் செல்லுபடித்தன்மை அவ்வளவே!
சூத்திரர்களின் முதலீட்டில் வெளிவரும் பளபளக்கும் பத்திரிகைகளில், தலித்துகளின் வீட்டிற்குள் வந்து அலறும் அவர்களின் தொலைக்காட்சிகளில் "SC / ST நீங்கலாக" மணமகன், மணமகள் தேடுவதை தமிழ்த்தேசிய கருத்தியல் பிரச்சாரம் தடுக்கவில்லை. வெட்கமற்று தொலைக்காட்சிகளில் அத்தகைய நிகழ்ச்சியை ஒலி,ஒளிபரப்பும் சூத்திர முதலாளிய நிறுவனங்களை எதிர்க்கிற ”அரசியல் உள்ளீடு” தமிழ்தேசியக் கருத்தியலில் இல்லை.
"Veg.only" போர்டுகள் தொங்கும்வரை, "SC / ST நீங்கலாக" விளம்பரங்கள் வெளியாகும் நிலைமை முடியும்வரை சாதியொழிப்பு பயணத்தின் திசைவழி மாறாதிருக்க வேண்டும் என்பதே சரியான அரசியல் மற்றும் சமூக இயங்கியலாகும். சூத்திரர் உள்ளடக்கிய ஒடுக்கப்படுவோருக்கான சரியானபாதை மற்றும் சமஉரிமை, சமத்துவம் , ஜனநாயகம், சமூக நீதி என்னும் இலக்கை எட்டும் தத்துவம் அம்பேத்கரியம் என்னும் புரிந்துணர்வுடன் தலித்தலைமைகள் பணியாற்ற வேண்டும் என்ற தலித்துகளின் எதிர்பார்ப்பில் தவறில்லை.
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தலித்அரசியல் சமூக விடுதலைப்பணிகள் மறுபடியும் சரியான திசைவழியில் பயணித்தால் மட்டுமே இந்துத்துவ அரசியல் சக்திகள் மற்றும் பா.ம.க போன்ற சாதிபயங்கரவாத சக்திகளின் எழுச்சியைத் தடுக்க முடியும். தருமபுரி தாக்குதல் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இளவரசன் படுகொலை அம்பேத்கரிய சாதியொழிப்புக் கருத்தியலை முன்னெடுக்க வேண்டிய அவசரத்தேவையை தலித் தலைவர்களுக்கு உணர்த்துகின்றன. கருத்தை மயக்கும் வசீகர விளம்பர வெளிச்சத்தில் ஜொலிக்கும் ”புலி அரசியல்” அல்லது அதைப்போன்றதான வேறு ”திசைமாற்றிகளையும்” ‘பகுத்தறிந்து’ இனம் காண வேண்டும்.
ஒடுக்குமுறைக்கு எதிரான சமத்துவப் போராட்டம் என்னும் அரசியல் நுண்ணுர்வில் தலித்துகள் ஈழ ஆதரவு மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் தலித்துகளின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளில் ஈர்ப்போ, பிடிப்புணர்வோ கொண்டு தலித்துகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நின்று சூத்திரர்கள் இரட்டை வாக்குரிமை கோராமல் இருப்பது சூத்திரர்களுடனான ” அரசியல் அதிகாரப் பகிர்வை” அவர்கள் விரும்பவில்லை என்பதுடன் சூத்திரர்களின் சாதிஆதிக்க இந்துத்துவ மனநிலையை காட்டுகிறது. தலித்துகளின் விடுதலை உணர்வுக்கு எதிரான சூத்திரர்களுடன் சேர்ந்து "இன்னொருவரின்" விடுதலைக்கு கரம் கோர்ப்பது இயல்பாகவே ”கூடா நட்பு” நெருடல் உணர்வை ஏற்படுத்துகிறது.
தலித் இயக்கப் பதாகைகளில் ஒளிரும் ”பிரபாகரன்” உள்ளிட்ட படங்களைப்போல் சாதி இந்துக்களின் பதாகைகளில் மட்டுமின்றி தலித் இயக்கப்பதாகைகளில் கூட "பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, அன்னை மீனாம்பாள் , தந்தை சிவராஜ், ஜான் ரெத்தினம் , இம்மானுவேல் சேகரன் படங்கள் காணமுடிவதில்லை. தலைவர்களின் படங்கள் வரலாற்றின் பாடங்கள் என்ற புரிதலில் பார்த்தால் இருட்டடிக்கப்பட்ட அவர்களின் போராட்ட வாழ்வை சேரிகள் தெரிந்துகொள்ள முடியாமல் அத்தகையோரின் படங்கள் மறைக்கப்படும் காரணம் புரியும்.
பண்டிதர் அயோத்திதாசர் , ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் பணிகளை இன்னும் சேரி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்காததற்கு அம்பேத்கரை ”எதிர் அரசியல் குறியீடாகக் ”கருதும் சாதி இந்துக்களை தலித் இயக்கங்கள் பொறுப்புதாரிகளாக்க முடியாது.
தங்களுக்கான "வகுப்புவாரி உரிமை” கோரும் சூத்திரர்கள் கூட்டணி உறவு கொள்ளும் தலித் கட்சிகளுக்கு தேர்தல் இடப்பகிர்வில் சேரி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிப்பது அவர்கள் முன்வைக்கும் "வகுப்புவாரி உரிமை” கொள்கைக்கே எதிரானது. 46 ஆண்டுகள் தமிழகத்தில் அரசு அதிகாரத்தில் ஊறித்திளைத்துவரும் சாதி இந்துக்களின் பேராதரவுப் பெற்ற திராவிட கட்சிகள் ஒருமுறைகூட "தலித் முதலமைச்சர்" கோஷத்தை வைக்காதது ”அவாள்” முன் மண்டியிட்டு பணியும் அடிமத்தனம்தான். சூத்திரர்களின் "வகுப்புவாரி உரிமை” அல்லது “சமூகநீதி” பார்ப்பனீயத்தால் மலடாக்கப்பட்ட நகைமுரணான “சமூகநீதி”.
சாதியின்முன் பணியும் சூத்திரர் அரசுகள் முழங்கும் சமூகநீதி நம்பகத்தன்மையற்றது. சட்ட மன்றத்தில் இது ”நாலாஞ்சாதிஅரசு” அல்லது “சூத்திரர்அரசு” என்று தம்பட்டம் அடிக்கும் அவர்களின் அரசு சட்டப்படி நிரப்பியிருக்க வேண்டிய தலித்மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளை 100% நிரப்பாமல் "Back Lack" காலியிடங்களாகவே "அடைகாப்பது" அவர்களின் ”சமூக நீதி- சூத்திரர் நீதி”தான் என்பதை அம்பலமாக்கி விட்டது.
இந்திய அரசியல் சட்டப்படியான தலித்மக்களுக்கான கல்வி வேலைவாய்ப்பினை 100% நிரப்பாமல் மத்திய அரசுப் பணியில் சூத்திரர்கள் பயன்பெறும் “மண்டல்கமிஷனை” 100% முழுமையாக நடைமுறைப்படுத்த போராடும் சூத்திரர்களின் "சமூகநீதியை" தலித்துகளைத் தவிர யார் கேள்வி கேட்கமுடியும்? கற்பனையானது என்றாலும் முரண்பட்ட நியாயங்களுடன் இரட்டைவேஷம் தரிக்கும் சூத்திரர்களின் "தமிழ்த்தேசிய" அரசில் தலித்துகளுக்கு என்ன பங்கைத் தந்துவிடுவார்கள்? வரலாற்றின் நெடுகிலும் "இரட்டை வேஷம்போடும்" வேடதாரிகளுடன் "தோழமை" கொள்ளுதல் ’பொய்த்துப்போகும் கனவு’ என்னும் ஆபத்து நிறைந்தது.
"தமிழ்த்தேசியம்" தழைத்து, செழித்து வளரும் இந்த சமகாலத்தில்தானே தர்மபுரி மற்றும் மரக்காணத்தில் தலித்துகளின் குடிசைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பா.ம.க வின் சூத்திரசாதி வன்னியர்கள் வாழத்துடித்த இளவரசனை ”காவுவாங்கி” தங்களின் ”வருணக்கடன்” முடித்தபோது தமிழ்த்தேசிய ”முழங்கிகள்” ஈழப்படுகொலைக்கு நீதிகேட்டு போர்பரணிக்கொட்டி இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டதுபோல் தைலாபுரத்தை முற்றுகையிடாது கடைபிடித்த மவுனத்தின் பொருளை எந்த அகராதியைப் புரட்டி புரிந்து கொள்ளாலாம் என்பதை ”தமிழ்த்தேசிய சாதி இந்துக்களிடமே” விட்டுவிடலாம். தலித்துகளின் குடிசை எரிக்காமல் சேரிகளில் கொலைகள் நடக்காமல் ”அகண்ட தமிழ்த்தேசியம்” அமைக்கும் ’பொன்னுலகு’ முயற்சிக்கு முற்போக்குப் பேசும் சூத்திரர்கள் கைவசம் வைத்திருக்கும் வேலைத்திட்டம் என்னவோ?
சமூகநீதிபேசும் சூத்திரர்களின் அமைப்பிற்குள் அம்பேத்கர் மற்றும் பண்டிதரின் கருத்தியலை அவர்களின் கொள்கை வேலைத்திட்டங்களில் சேர்க்காமல், விவாதப் பொருளாக்காமல் ”தள்ளி” வைத்திருப்பதை வருணாசிரம ’தீட்டு’க் கருத்தியலுடன் ஒப்பிட்டு அரசியல் தளத்தில் நிலவும் ”கருத்தியல் தீட்டு” அல்லது ”கருத்தியல் தீண்டாமை” எனக் கருத இடமுண்டு.
அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமைகோரும் சூத்திரர்கள் தங்களின் ஆதிக்கம் நிலவும் கோவில்களில் தலித் மக்களுக்கான கோயில் நுழைவு உரிமை வழங்க மறுப்பது ”சூத்திரர்களே மேல்சாதி” என்னும் சாதி ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுதான் என்பது மறுப்பதற்கில்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஊரை வளைத்துப்போடும் சூத்திர சாதியினரிடமிருந்து "பஞ்சமி நிலங்களை" சூத்திர அரசுகள் மீட்டுத்தரவில்லை. "பஞ்சமி நிலங்களைப்" பற்றி தலித்துகளை தவிர வேறுயாரும் பேசாமல் மௌனித்து இருப்பதற்கு அவர்களின் வெளிப்படையான சூத்திரபாசம்தான் காரணம். இரட்டைக் குவளைகள் அல்லது ”செரட்டைகள்” ஒழியாத தேசத்தில் இருந்து ஒலிக்கும் விடுதலை முழக்கத்தில் வன்மங்களின் ஓலம் அடக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. பார்ப்பனிய கருத்தியலில் ஊறித்திளைக்கும் சூத்திரர் அல்லது தமிழ்த்தேசியவாதிகள் நமது இலட்சியத்தின் ”பிறழ்வுபுள்ளிகள்” என்பது புரியுமானால் சிவகாமி உள்ளிட்ட போராளிகளின்மீது சாதிவெறி தூற்றல்கள் நிகழாது. அம்பேத்கரை முன்வைத்து தலித்துகளை அணிதிரட்டுதல், தலித் அமைப்புகளுக்கு வலிமையூட்டல் என்னும் அரசியல் பணிகள் மட்டுமே தலித்துகளின் சமூகத் தற்காப்பு அரண். பிறழ்வற்ற சாதிஒழிப்புப் பணிகளே நமது விடுதலைப் பயணத்தின் சரியான திசைவழி.
...லெனின்
25-09-2013